Wednesday, 15 June 2016

குழந்தையோட சேர்ந்து நாமும் வளரனும்!


அனு, முதல்நாள் நடந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் படுத்திருந்த அறையில் சிறிய வெளிச்சம் வந்ததைப் பார்த்து அதிர்ந்து எழுந்தாள். அனு தன் அறையிலிருந்து அம்மாவைத் தேடி ஓடினாள்.

”அம்மா, அம்மா எங்கே இருக்கீங்க?” என்று கத்திக் கொண்டு அம்மாவை அடுப்படியில் பார்த்து உடனே ஒரு நிமிடம் சொல்லலாமா, வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றாள்.
”என்னடி, கத்திக்கிட்ட வந்த, இப்ப என்ன அப்படியே நிக்குற, என்ன வேணும் சொல்லு”, என்றாள் அம்மா.

அம்மா, நாம தூங்குற அறையில ஒரு சின்ன வெளிச்சம் வருது, கவனிச்சுங்களா? அதை பார்த்தாலே ஒரு மாதிரி பயமா இருக்கும்மா. நேத்து நான் காலையில காட்டுப் பக்கம் போனப்ப, யாரோ அந்த இருட்டுல டார்ச் அடிச்ச மாதிரி இருந்தது. அந்த இருட்டுல ஏதோ வெளிச்சம் தெரிஞ்சது அம்மா. அவசர அவசரமா, அந்த துளி வெளிச்சத்தைப் பார்த்து நாம வெளியே ஓடனும் இல்ல? ஏன் அம்மா நம்ப வீட்டுல ஒரு கழிப்பறை கட்டக்கூடாது? என்றாள் அனு.

“ இப்ப என்ன பிரச்சனை, விடியத்திற்கு முன்னாடியே போக பழக்கிக்கோ, நாங்கெல்லாம், இத்தனை வருஷமா பழகிக்கல,உனக்கு என்ன? என்று அம்மா அவளை அதட்டினாள்.

“ இல்ல அம்மா, விடியும் முன்னாடியே போகும் போது, யாராச்சும் நான் போற இடம் பக்கமா வந்தா பயமா தெரியல ஒருமாதிரி இருக்கு மா. யாரோ டார்ச் அடிக்கிற மாதிரியே இருக்கு எனக்கு. சின்ன வெளிச்சம் கூட எனக்கு இப்பலாம் பயமா இருக்கு” என்றாள் அனு.
”ஏதாச்சும் சும்மா கதை சொல்லாம, போய் படிக்கிற வேலையை பாரு.நம்ப ஊர்ல இத்தனை வருஷமா நாங்க பொம்பளைங்க எல்லாரும் போகிட்டு இருக்கோம், எந்த தப்பும் நடக்கல. கழிப்பறை கட்டறதுலாம் தேவை இல்லாதது” என்று சொல்லி அனுவை அனுப்பிவிட்டாள்.
கழிப்பறை ஏன் அம்மாவுக்கு முக்கியமாவே படலனே புரியல, நம்ப ஊருல எல்லாரும் இப்படியே வெளியே போய் பழகிட்டாங்க, ஆனா எனக்கு வெளியே போகறது சுத்தமா பிடிக்கல, யாரச்சும் வந்திடுவாங்களோ, பார்ப்பாங்களோனு ஒவ்வொரு நாளும் பெரிய அவஸ்த்தையா இருக்கு” என்று மனதிற்குள் பேசிக்கொண்டே தூங்கி விட்டாள்.
கொஞ்ச நாட்களாக அனு வழக்கம் போல் சரியாக சாப்பிடுவது இல்லை, பள்ளி முடித்து வந்ததும் உறங்கி விடுகிறாள். அம்மாவிடம் பிரச்சனையை சொன்னாலும் அதை பெரிதாக பார்க்க போவதில்லை என்று அனு தீர்மானித்து விட்டாள்.
தன்னுடைய அறையில் சிறிதாக விழும் வெளிச்சம் மட்டும் அவளை தொந்தரவு செய்கிறது. வெளிச்சத்தை பார்த்தாலே ஒருமாதிரியான பயம் வருவதை அவள் மெல்ல மெல்ல உணர்கிறாள். காலையில் வழக்கம் போல் காட்டுப் பக்கம் விடியும் முன்பு போக வேண்டும் என்று நினைக்கும் போது அவள் சாப்பாட்டை அறுவெறுப்பாக பார்க்க தொடங்குகிறாள். இதனால் அவள் சோர்வாகி பள்ளியிலும் சரியாக பாடத்தை கவனிப்பதில்லை.

அனுவின் வகுப்பாசிரியர், அமலா டீச்சர் இவளது நடவடிக்கையை கவனிக்கிறார். அன்று மாலை பள்ளி முடிந்ததும், அனைவரும் சென்றபின், அனுவை அழைத்து பேசுகிறார்.
“ என்னாச்சு உனக்கு, கிளாஸ்ல வழக்கம் போல் நீ ஆர்வமா இல்ல, முகமும் ரொம்ப சோர்வா இருக்கு. வீட்டுல ஏதாச்சும் பிரச்சனையா? என்று கேட்டார்.
அமலா டீச்சர் என்றால் அனுவுக்கு ரொம்ப பிடிக்கும்.அவரை மாதிரிதான் டீச்சர் ஆக வேண்டும் என்று ஒருமுறை வகுப்பில் கூறியிருக்கிறாள். அதனால் அமலா டீச்சரிடம் தன்னுடைய மனநிலையை கூற வேண்டும் என்று சொல்ல தொடங்கினாள்.
“ எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல டீச்சர், இப்பலாம் எனக்கு வெளிச்சத்தை பார்த்தாலே பயமா இருக்கு” என்றாள்.
“வெளிச்சத்தைப் பார்த்து என்ன பயம்? யாராச்சும் உன்னை கிண்டல் பண்றாங்களா? இல்ல வேற எதையோ பார்த்து பயந்திருக்கியானு சொல்லு” என்றார்.
யாராச்சும் கிண்டல் பண்ணினா, அதை நேரடியா எதிர்க்கொள்ள முடியும், ஆனா என்ன பிரச்சனைன்னா, காலையில நிலவோட வெளிச்சத்திலேயே காட்டுப் பக்கம் போகறது, அய்யோ.. வெளிச்சம் வரக்கூடாதுனு நினைச்சு வீட்டை விட்டு ஓடறது எனக்கு பிடிக்கல டீச்சர்”.
காட்டுப்பக்கம் மலம் கழிக்க போகனுமேனு இப்பலாம் சாப்பாடு கூட எனக்கு இறங்கிறதுல” என்று அழுதுக் கொண்டே அமலா டீச்சரைப் பார்த்து நின்றாள்.
“நாளைக்கு உன் அம்மாவை கூட்டிட்டு வா” என்று சொல்லி அனுவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இரவு அம்மா சமையலறையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவிடம் மெல்லிய குரலில் “ அம்மா நாளைக்கு எங்க அமலா டீச்சர் உன்னை கூட்டிட்டு வர சொல்லியிருக்காங்க, என் கூடவே வா அம்மா” என்று சொல்லி அன்று இரவும் சாப்பிடாமல் அடுத்த நாள் விடியலுக்காக காத்துக் கொண்டிருந்தால். இத்தனை நாட்கள் விடியலை வெறுத்து வந்த அமலாவுக்கு, மறுநாள் ஏதோ புதுசா நடக்க போகுதுனு மனசு சொல்லுது. இதை நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டாள்.
காலை பள்ளிக்கு தயாராகி, அம்மா தயாரா என்பதை அவருடைய சீலை மூலம் கண்டுப்பிடித்து பள்ளிக்கு புறப்பட்டாள்.

அனு, அமலா டீச்சரை அழைக்க ஸ்டாப் ரூம் பக்கம் சென்றாள். அனுவை பார்த்ததும் அமலா டீச்சர் வெளியே வந்து, அனுவின் அம்மாவைப் பார்த்து மெல்லியதாய் சிரித்தார்.
“டீச்சர், நீங்க கூப்பிடாத சொன்னா, அவ வீட்டுல படிக்கிறதே, எப்ப பார்த்தாலும் ரூமுக்கு போய் தூங்கிட்டு இருக்கு. நீங்க இது சொல்லத்தான் கூப்பிட்டீங்க அப்படினீனா, நல்ல அடிங்க. எனக்கு பிரச்சனை இல்லை. இந்த பொண்ணு நல்லா படிக்கனும், என்னை மாதிரி இருக்க வேண்டாம் தானே ஸ்கூலுக்கு இவ்வளவு தொலைவா இருந்தாலும் பரவாயில்லைனு அனுப்பிறேன். இதுலாம் இவங்களுக்கு எங்கே புரியுது?” என புலம்பி தீர்த்தார் அனுவின் அம்மா.

“அம்மா, கொஞ்சம் பொறுமையா இருக்கீங்களா? நான் எதுக்கு கூப்பிட்டேனு தெரியாமலேயே உங்க பாட்டுக்கு பேசறீங்க?” என்று அதட்டல் தொணியில் அமலா டீச்சர் அவரிடம் கேட்டார்.
இல்லம்மா…. என்று அனுவின் அம்மா அவரை பார்க்க முடியாமல் கீழே குனிந்து விட்டார்.

 உங்க பொண்ணுக்கு என்ன பிரச்சனைனு நீங்க கேட்டீங்களா? அவளுக்கு வீடுதான் பிரச்சனை. வீட்டுலிருந்து காட்டுப்பக்கம் போய் மலம் கழிக்க போகறதை பெரிய அவஸ்தையா பார்க்குறா. அவளை யாராச்சும் பார்த்திட்டா என்ன பண்றது பயந்து அவ ரொம்ப நாளா சரியா சாப்பிடாம பயந்து சோர்ந்து போயிருக்கா. வீட்டுல ஒரு கழிப்பறை கட்டனும் உங்ககிட்ட வந்து சொன்னபோது அதை நீங்க அலட்சியப்படுத்தியிருக்கீங்க இல்லையா?” என்றார் அமலா டீச்சர்.
ஆமா, நான் தான் அதுக்கு என்ன இப்ப தேவைனு சொன்னேன். நாங்கலாம், இத்தனை வருஷமா போகலயா? பழகிக்கலயா மா? இவளுக்கு மட்டும் என்ன பிரச்சனை எனக்கு புரியல” என்றார்.


“ உங்கள மாதிரியே இருக்கனும்னா ஏன் உங்க பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பறீங்க? நம்பகிட்ட இருக்கிற பிரச்சனையே மாறனும் நாம நினைக்கிறதோட அர்த்தம் புரியமா மாறிட்டு வரரதுதான். எது நமக்கு முக்கியம் தெரியாம, ஒரு ஓட்டம் ஓடிட்டு இருக்கோம். உங்க பொண்ணுக்கு கல்வி முக்கியம் நினைச்சது நல்ல மாற்றம் தான், ஆனா உறுதுணையா இருக்க வேண்டிய சுகாதாரம், ஆரோக்யம் பத்தி ஏன் நீங்கலாம் யோசிக்கிறது இல்ல? நம்ப இந்த குழந்தைகளுக்கு எதை கொடுக்கிறோம்? கொஞ்சம் யோசிங்க… அவளோட தேவையை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க… அம்மாவா இருங்க… உங்க பொண்ணோட சேர்ந்து நீங்களும் வளரனும். கழிப்பறை ஒன்னு இருந்தா அவளோட மனசு மாற நிறைய வாய்ப்பிருக்கு. படிப்பு கொடுத்தாச்சு போதும் நினைச்சு நிக்காம, அவளை ஏணியில ஏத்த இன்னும் நீங்க நிறைய மாறனும்” என்று சொல்லி அனு அம்மாவை அனுப்பி வைத்தார்.


நம்முடைய குழந்தைகளின் பிரச்னைகள் புரிகிறதா?



”பள்ளியில் தினமும் கழிப்பறையை உபயோகம் செய்ய முடியும்., நான் அங்க இருக்கும் போது அதைத் தான் பயனபடுத்துவேன். ஆனால் மாலை ஆறு மணிக்கு மேல் வீடு திரும்பினால், காட்டுப் பக்கம் தான் போகனும். பாதுகாப்பான ஒரு இடத்தை பயன்படுத்திட்டு மறுபடியும், இப்படி வந்து போகும் போது ஒரு மாதிரி சங்கடமா தான் இருக்கும் என்ன செய்ய?” என தன்னுடைய ஆதங்கத்தை பள்ளி படிக்கும் பெண் குழந்தை பகிர்ந்துக் கொண்டார்.
இப்படி கழிப்பறையைச் சுற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் இருக்கின்றன. கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பது இன்னும் நீடித்த வரும் நிலையில், மக்களின் பழக்கத்தை மாற்றி அமைக்க ஏதுவான காய்களை நாம் கண்டுணர்ந்து நகர்த்த வேண்டும்.
கிராமங்களில் நாம் செய்து வந்த வழக்கமான பயிற்சி முறையில் சில அடிப்படை பிரச்னைகள் இருக்கின்றன. இன்னும் நம்முடைய பழைய நகர்வுகளில் நின்றுக் கொள்ளாமல் புதிய மாதிரியான நவீன முறையில் காய்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி செய்ய வேண்டும்.
இதைதான் CLTS செய்து வருகிறது. இந்திய சுகாதார கொள்கையின் முக்கிய இலக்கான திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களை உருவாக்க நடத்தை தொடர்பு பரிமாற்றம் மிகவும் முக்கியம்.
இது குறித்த விழிப்புணர்வு இன்று பெரும்பாலான மாநிலங்களில் அதிகரித்து, செயல்படவும் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கிராம சுகாதாரத்தை இன்னும் வலுச்சேர்க்க கடந்த மாதம் ஐந்து நாட்கள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருப்பவர்கள், சுகாதார காவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
மக்களின் தேவைகளில் கழிப்பறை உண்டா?

கிராமங்களில் கழிப்பறை என்பது மக்களின் முக்கிய தேவையாக கருதப்படுவதில்லை. அதே சமயம், சிலர் அரசாங்கம் வழங்கும் கழிப்பறை கட்டுவதற்கான கடனுதவியை பற்றிய விழிப்புணர்வு அடைந்து கட்டினாலும், அதை பயன்படுத்தாமல் திறந்தவெளியை தான் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு வகையான மக்களும் நம் சமூகத்தில் தான் இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, பயிற்றுநர்கள் நடத்தை தகவல் தொடர்பில் வலிமை பெற்று, மக்களுக்கு கழிப்பறை அவசியத்தை உணர்த்த வேண்டும். இப்பயிற்சியின் மூலம் பல மாவட்டங்களிலிருந்து வந்த பயிற்றுநர்கள் களப்பணிக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.


திறந்தெவெளியில் மலம் கழித்தலற்ற கிராமத்தை உருவாக்க மனமாற்றத்தை முதலில் ஏற்படுத்தினால் தான் , மக்கள் தங்களுடைய தேவையை உணர்ந்து கழிப்பறை கட்டவும், அதை பயன்படுத்தவும் முன்வருவார்கள் என்ற வழிமுறையை அனைத்து பயிற்றுநர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

களப்பணியில் அறிந்த உண்மை-

பயிற்சியாளர்களுக்கு நேரடியாக உணர்த்த குழிபாந்தண்டலம் பஞ்சாயத்தை சேர்ந்த 4 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்ப்பட்டது. கிராம மக்களை ஒன்றுத் திரட்டி முதல் நாள் பயிற்சியின் போது, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நம்முடைய உணவில் மலம் கலக்கிறது என்பதை மக்கள் முன், நேரடியாக பரிசோதனை செய்து காட்டப்பட்டது.

மேலும், தினமும் நாம் உண்ணும் உணவில் மலம் கலக்கிறது என்ற உண்மையை மக்கள் முன் நேரடியாக எடுத்துரைத்தபோது, மக்களிடம் அதிர்ச்சி அலை ஏற்பட்டத்தை உணர முடிந்தது.

இந்த உண்மை அப்பகுதி கிராம மக்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்கள் உடனடியாக கழிப்பறையை கட்டுவதும் சாத்தியம் இல்லை. கழிப்பறை கட்டி முடிக்கும் வரை நாம், சில முன்னெச்சிரிக்கை பணிகளை செய்யலாம் என்றும் பயிற்சியாளர்களால் வலியுறுத்தினார்கள்.

கழிப்பறை கட்டும் வரை தற்காலிக தீர்வு ?

கழிப்பறை கட்டும் வரை, திறந்தவெளியில் மலம் கழித்து வருபவர்களை, மண்ணைப் போட்டு மூடலாம், இப்படிச் செயவதால் மலம் மூலம் வரும் கிருமிகளை தவிர்க்க முடியும்.

களப்பணியின் போது, இது மக்களிடம் விளக்கமாக சொல்லப்பட்டது, ஆனாலும் இதை தவராமல் கண்காணித்து மண் எடுத்து செல்கிறார்களா, அவர்கள் வீட்டில் கழிப்பறை இருந்தால் அதை பயன்படுத்த வேண்டும் போன்றவையை வலியுறுத்த கிராமத்திலேயே கண்காணிப்புக் குழு அவசியம்.

கிராம மக்களே கண்காணிக்கலாம்

களப்பணிக்கு சென்ற கிராமங்களிலேயே மக்களுள் சிலர் கண்காணிப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டு, யார் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள், அவர்கள் உடனடியாக கையில் மண் எடுத்து செல்ல வேண்டும் என்பதை கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதை கண்காணிப்பு குழு எப்படி செய்கிறார்கள், இதை மற்ற கிராமங்களிலும் செயல்படுத்த முடியுமா போன்றவை பயிற்சியாளர்களும் கற்றுக்கொண்டனர். காலை 4 மணி முதல் பயிற்றுநர்களும் களத்திற்குச் சென்று கிராம மக்களுக்கு உதவியாகவும், அவர்களுக்கு தூண்டுதலாகவும் இருந்தனர்.





புதிய தொழிநுட்பமும், பாதுகாப்பும்

மேலும், முக்கியமாக கழிபப்றை கட்ட, அதிக பணச் செலவு ஆகும் என்ற பிமபத்தை இந்த பயிற்சி உடைத்தது. கழிப்பறையை மாற்று தொழில்நுட்ப முறையில், குறைவான தொகையில் கட்ட முடியும் என்பதை பயிற்றுநர்கள் பயிற்சியின் போது மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்கள்.

பாதுக்காப்பு முறையான ”லீச் பிட்”முறை ஏன் கிராமங்களுக்கு தேவை, அதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் லாபம், சுற்றுச்சூழலுக்கான நன்மைகள் இந்த பயிற்சியின் போது எடுத்துரைக்கப்பட்டது. ஐந்து நாட்கள் வழங்கப்பட்ட தீவிர பயிற்சியின் மூலம் மக்களிடம் கழிப்பறை என்பது தேவை பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் அவர்களின் சிந்தனையை தூண்டச்செய்தது. பயிற்சியின் இறுதி நாளில் பலரும் கழிப்பறை கட்ட முன் வந்தார்கள். குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி, தனக்கும் கழிப்பறை வேண்டும் என்றும், எங்களை கையோடு எங்கு கட்ட வேண்டும் என்று கேட்டு அழைத்துச் சென்றார்.

இவரிடம் கண்ட இந்த மனமாற்றம் தான் பலர் கிராமங்களில் இனிவரும் காலங்களில் காணமுடியும் என்ற நம்பிககையோடு பயிற்றுநர்கள் அவரவர் கிராமங்களில் மக்களுக்காக குரல் கொடுக்க தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த குரல்களுக்கான பலன் கிடைத்து விடும் என்று நம்பிக்கை அனைவரிடத்திலும் பார்க்க முடிகிறது.





Tuesday, 14 June 2016

நல்லுரில் என்ன நடக்குது? அவங்க கழிப்பறை பாதுகாப்பானதா?




நல்லூர் கிராமத்து VPRC பெண்கள் கூட்டத்திற்கு தயாராகின்றனர்.
பார்வதி: நேத்து தான் பயிற்சி முடிச்சி ஊருக்கு வந்திருக்கேன்
மலர்: என்ன பயிற்சி அக்கா?
பார்வதி: பாதுகாப்பான கழிப்பறையை கட்டறது, அதை நம்ம ஊர் மக்கள்கிட்ட எப்படி எடுத்திட்டு போகறது பத்தி பயிற்சி நடத்தினாங்க.
மலர் பார்வதியிடம் பேசுகிறாள்…
மலர்:பாதுகாப்பான கழிப்பறைன்னா என்ன அக்கா?
 பார்வதி: கழிப்பறை கட்டறது ரொம்ப அவசியம் அதுவும், உறிஞ்சிக்குழி முறையில கட்டறதால நிறைய நன்மைகள் கொடுக்கும்ன்னு சொல்லியிருக்காங்க, அதான் ரொம்ப முக்கியமா நம்ம ஊர் மக்கள் கிட்ட சொல்ல ஆரம்பிக்கனும்
கூட்டத்தில் சிறிய பெண் ஒருவள் எழுந்து நிற்கிறாள்
ஷோபி :அது என்ன, உறிஞ்சிக்குழி முறை ? கொஞ்சம் விவரமா சொல்லுங்க?
பார்வதி கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைக்கிறாள்
பார்வதி: லீச் பிட்ங்கிறது என்னன்னா, 3 அடி ஆழத்துல , 1 மீ விட்டத்தில 2 குழித் தோண்டனும், உறிஞ்சுக்குழியை இதுல அமைக்கிறோம். அதுனால நம்பளோட கழிவுகள் இருக்கிற தண்ணீ எல்லாம் ஒரு பக்கமா போயிடும், வெறும் மண்ணுதான் அடியில போய் தங்கும்.
மலர் பார்வதியிடம்
மலர்: அக்கா, அதுக்கு ஏன் 2 குழிகள் ? பார்வதி: 2 குழி எதுக்குன்னா, முதல நாம ஒரு குழியைத் தான் பயன்படுத்துவோம், 5-6 வருஷத்துல அது ரொம்பிடும், அப்பறம் அதுக்கு போற இணைப்பை மூடிட்டு, இன்னொரு குழியை திறந்து விடலாம். முதல மூடின குழியிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு, நல்ல தரமான இயற்கை உரமா மாறும். அது நம்ம நிலத்துக்கு ஊட்டச்சத்தா இருக்கும்.
கூட்டத்தில் ஒருவர் பார்வதியிடம்
பெண் 1: இந்த மாதிரி அமைக்கும் போது, நமக்கு அதை வெளியே எங்கையும் கொட்ட தேவையில்ல இல்ல?
பார்வதி: ஆமா, அதான் இதோட பலமே. நம்ம வீட்டு கழிவுகள், நமக்கே பயன்படும், நம்ம சுற்றுபுறத்தையும் கழிவுகள் இல்லாம பாதுகாப்பா வைச்சுயிருக்கா உதவும்….
கூட்டத்தில் ஒரு பெண்…
கழிப்பறையை பயன்படுத்துவது பாதுகாப்பானதுன்னு தெரியும். ஆனா, அதை எப்படி ஊருக்கும், நமக்கும் நல்லதை கொடுக்கிற மாதிரி கட்டனுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.



மருமகள் மனம் புரிந்த மாமியார்




புதியதாய் திருமணமாகி பூஞ்சோலைக்கு வருகிறாள் எழிலரசி. தன்னுடைய திருமணத்திற்கு முன், வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திய எழிலரசிக்கு, புகுந்த வீட்டில் திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் மிகுந்த மனச்சோர்வைத் தருகிறது. அம்மாவிடம் தன் சங்கடத்தைச் சொல்கிறாள். அம்மாவிற்கு இதற்கு என்ன தீர்வு என்று புரியவில்லை.
எழிலரசியும், எழிலரசி மாமியார் தனமும் சுய உதவி குழுவின் கூட்டத்துக்கு விரைந்து செல்கின்றனர்.
தனம்: இதுதான் என் மருமக, இவளையும் இந்த குழுவுல சேர்த்துக்க முடியுமா?
குழு தலைவி : ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் குழுவுல இருக்கனும்.
தனம்: அப்படியா? இது எனக்கு தெரியாதும்மா
குழு தலைவி: ம்ம்… நம்ப ஊர்ல புதுசா கல்யாணமாகி வந்த சின்னப் பொண்ணுங்க  சேர்ந்து குழு தொடங்கனும் சொன்னாங்க. அதுல சேரலாம்.
தனம்: சரிம்மா, ரொம்ப சந்தோஷம்..
எழிலரசி அருகில் அமர்ந்திருந்த அவள் வயதை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசுகிறாள்.
எழிலரசி: நீங்கலாம் வெளிக்கு எங்கே போவீங்க?
மயில் அக்கா: இந்த பெரும்பாலான வீடுகள்ல கழிப்பறை வசதி இல்ல. நான் இந்த ஊர்லேயே பிறந்து, வளர்ந்து இந்த ஊர்லயே கல்யாணம் கட்டியாச்சு. எனக்கு விவரம் தெரிஞ்சு இங்கே காட்டுப்பக்கம் தான் நாங்க போயிட்டு வரோம்.
எழிலரசி: அய்யோ யோ… எப்படி அக்கா, எங்க அம்மா வீட்டுல கழிப்பறை வசதியிருக்கு. எப்ப வேணுமாலும் பயன்படுத்திக்கலாம். ஆனா இங்க வந்து எனக்கு காலையில காட்டுப்பக்கம் போகவே ஒருமாதிரி இருக்கு..
மயில் அக்கா: சரிதான்… எங்களுக்கு பழகிப்போச்சு.. நீ சொல்ற மாதிரி காலையில இல்ல நல்ல இருட்டுக்கு அப்பறம்தான் நம்பாளல போக முடியும்…
மயில் அக்கா: தனம் அம்மா, உங்க மருமக இப்பதான் பேசிக்கிட்டு இருந்துச்சு.. நல்ல பொண்ணா இருக்கு.. பாவம் அதுக்கு காலையில காட்டுப்பக்கம் போகறது சங்கடமா இருக்கறதா சொல்லிச்சு.. நாம தான் பழகிட்டோம்.. இந்தக்காலத்து பொண்ணுங்களுக்கு இதுலாம் சங்கடமா தெரியுது…
தனம், மயில்  கூறியதைப் பற்றி யோசித்துக் கொண்டே மருமகளுடன் வீட்டுக்குப்  போகிறாள்.
இரவு உணவுக்கு அனைவரையும் அழைக்கிறார் தனம். அவள் பக்கத்தில் சாப்பாடு தட்டுடன் எழிலரசி உட்கார்ந்தாள்.
தனம்: நானும் உங்க எல்லார்கிட்டயும் ரொம்ப வருஷமா ஒரு கழிப்பறை கட்ட சொல்லி கேட்டுட்டு இருக்கேன்.. நீங்க யாரும் காது கொடுத்தே கேட்காம அலட்சியமா இருக்கீங்க
தனம் கணவர்: என்ன உனக்கு பிரச்சனை சாப்பிடறப்ப எதைப் பத்தி பேசிட்டு இருக்க?
தனம்: சாப்பிடும் போது தான் இதைப் பத்தி பேசனும்.. நம்ப வீட்டுக்கு புது பொண்ணு வந்திருக்கு.. அந்தப் பொண்ணுக்கு நாம தான் பொறுப்பு… மனசுல வச்சுக்கோங்க..
செந்தில்: என்னம்மா, நம்ப அவளை நல்லாத்தானே வச்சுயிருக்கோம்.. இங்க என்ன குறைச்சல் அவளுக்கு ?
தனம்: அவளுக்கு என்ன வேணும்னு நீ கேட்டிருக்கியா? கழிப்பறை இல்லாததால, பொண்ணு ரொம்ப கஷ்டப்படுது. அந்தப் பொண்ணு வயசைத் தாண்டி தானே நானும் வந்திருக்கேன். பொம்பளைக்குத்தான் பொம்பளை மனசு புரியும்
செந்தில்: ( யோசிக்கிறான்) இப்ப அதுக்குன்னு காசுக்கு என்ன பண்ண முடியும்? அப்பறம் பாத்துக்கலாம் அம்மா.. முதல்ல சாப்பாடு போடுங்க…
தனம்: நான் ஒரு முடிவு எடுத்துட்டேன், என்னோட குழுவுல கடன் வாங்கி நம்ப வீட்டுக்கு கழிப்பறை கட்டப் போறேன்.. இவளும் இன்னொரு குழுவுல சேரப் போறா.. சீக்கிரம் கடனை நாங்களே அடைச்சுடுவோம்.

எழிலரசி மாமியாரைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறாள்.